Saturday, 14 July 2012

அவள்....!


தேர்போல நடந்துவந்த பாவை---அவள்
   தீராத  ஆசைதரும் பூவை---என்னில்
தீயாகத்தான்  நுழைந்து
பனியாக குளிர்ந்துவிட்ட 
கோவை---என் ---தேவை

மெல்லத்தான்  கண்திறந்து  பார்த்தேன் அவள்
  மென்னழகை என்னுள்ளே வார்த்தேன் பூந்
தளிராக  சிரிக்கின்றப்
பூவுதட்டு புன்னகையில்
வேர்த்தேன் கவி---சேர்த்தேன்

பிறைநெற்றி  நிலவாகப் பொட்டு ---காதல்
 பித்தாக்கும்  காந்தவிழி மொட்டு---செம்
மாதுளையும்  மாங்கனியும்
 சேர்ந்தமைந்த  தேனிதழ்
தொட்டு ---மின்னல் வெட்டு

கவிகோடி  படைக்கின்ற அரங்கம் ---தமிழ்
  கற்பனையை  அள்ளுகின்ற சுரங்கம் அந்த
அழகுமயில் அருகிருக்க
பழகாமலா என்மனசு
 உறங்கும்---பொழுதும்---கிறங்கும்

ஒரு கவிஞன்...!





சூரிய விதையை விதைப்பான் பூமி
சூழும் இருளை அறுப்பான்---அவன்
சீரிய வாழ்வினில் வறுமை நசுக்க
தினம்தினம் புழுவாய் தவிப்பான்


கூரிய தமிழ்சொல் எடுப்பான் தீயில்
ஊறிய கவியை கொடுப்பான் அவன்
பாடியப் பாட்டினில் பசியிரு க்காது
வாடிய வயிறாய் படுப்பான்

எரிபுயல் போலவே நடப்பான் -----உலகைப்
புரட்டிடும் கவியைப்  படைப்பான் ---அவன்
ஏளனப் புழுதியை என்றும் ஏற்று
எளிமையின் நிழலாய் கிடப்பான்

இவந்தான் பூமியின் வேந்தன் தமிழ்
கவியால் ஈர்க்கும் காந்தன் இவன்
வாழும் போது மதிப்புக ளில்லை
மண்ணில் பாவ மாந்தன்.....!



Wednesday, 4 July 2012

விவசாயம்

ஆலமர விழுதொடிச்சி
ஆரமர பல்லு தொளக்கி
ஆளுயர தொட்டியில்
மீனப்போல நான்குளிச்சி
தும்பபூவா துண்டெடுத்து
நோவாம நான் தொடச்சி
காலநேர கஞ்சிக்காக
சோலக்காட்டில் காத்திருக்கேன்

ஆழாக்கு அரிசியத்தான்
அவசரத்தில் கூழாக்கி
காரத்துக்கு ஊறுகாவ
பச்சைப்பயிரில் அறைச்செடுத்து
மேலாக்கப் போத்துக்கொள்ள
மாத்து துணி கிடையாது
நோகாம நான் துவைச்சி
கிழியாம காயவச்சேன்
கிழிஞ்சிபோன விவாசயத்த
தைக்கவேணும் பொறுங்கமச்சான்

வெட்கப்பூ

வாசப்பூ மேனிக்காரி
ரோசாப்பூ உதட்டுக்காரி
ஆசப்பூ வச்சிருக்கேன் ராசாத்தி
ரோசப்பூ உனக்கெதுக்கு நீவாடி

முல்லைப்பூ விழிக்காரி
இல்லைப்பூ இடைக்காரி
தொல்லைப்பூ நான் கொடுக்க ராசாத்தி
கொல்லைப்பூ உனக்கெதுக்கு நீவாடி

வாடாப்பூ நானிருக்கேன்
வாடும்பூ சூடிக்கிற
கூடாப்பூ உனக்கெதுக்கு
கூடும்பூ நானிருக்க---வெட்க
கூடாப்பூ உனக்கெதுக்கு நீ வாடி

Sunday, 24 June 2012

ஓரங்க நாயகன்....

ஓரங்க நாடக நாயகனாய்
அவன்.......

பூக்கள் எல்லாம்
இவனுக்காகவே மாலையானதோ
மலையாய் மலையாய் மாலைகள்

இவ்வளவு ரசிகர்களை
இவ்வளவு நாள் பார்த்ததில்லை
இவன்....

இவன் கர்வன்
எவர் சொல்லையும்
காதில் போட்டுக்கொள்ள
காது கொடான்.....

உள்ளுக்குள்
ஆயிரம் பூரிப்பு
எதிரிகளும் இவனைத் தேடி

முரண்பாடு
வாங்கியவன் சிரிக்கிறான்
கொடுத்தவன் அழுகிறான்
இனி
எவன்பாடு

நேற்று
இன்று
நாளையென்ற
சூழல்வலையில்
இவன் இல்லை

ஏனெனில்
இவன் இல்லை
பிணம்

Saturday, 23 June 2012

நீ சூரியன்..........!


தீக்கூட்டீல்......!
எப்படி
தேன்கூட்டுக்கு சம்மதித்தாய்

இடிதாங்கி நீ
கிளிவந்து உட்காந்தா
இடிந்து போவாய்

காட்டாற்று   வெள்ளத்துக்கு
கைவளையின்
சிறையெடுப்பா?

காடுபுரட்டும் காற்று
கூட்டுக்குள் முடஙகாது

கைவீசி
மெய்பேசி
நெடுந்தூரம் நட.......!
உனக்கான உலகம் வேறு

வானத்தின் கீழ்
உனது வீடு
கோடுகளில்லாத தேசம்
உன்னுடையது

நீ
உச்சி சூரியன்
ஊர்மெச்ச ஒளிவீசு........!











Friday, 22 June 2012

சுமைத் தாங்கும் மலர்கள்

மென்மையின் பூரணங்கள்
வறுமைதுடைக்க...
கிழிந்திடும்
பட்டுத்தோரணங்கள்

கந்தகத்தீயில்
காசுக்காய் பொசுங்கும்
சந்தனப் பூக்கள்

தலைவாழைக்கு
நிழலாக.....
வெயிலில் கறையும்
பக்கவாழைகள்

வயிறுகழுவ
வட்டில்கழுவும்
தொட்டில் பூக்கள்

புத்தகம்தேடி
பூக்கும்வயதில்
சிப்பிகள்விற்று
சிதைந்திடும் முத்துக்கள்

சுகத்தில் முளைத்து
சுதந்திரம் தொலைத்த
தேசமிழந்த தேசியகீதங்கள்

முதலில்
குழந்தையும் தெய்வமும்
என்ற வார்த்தையை
மறுபரீசீலனை செய்யனும்.

இவனை விட்டுவிடுங்கள்........!

இவனை
விட்டுவிடுங்கள்

இவன் 
பூமிக்கு  பாரமானவனல்ல
பூமியும்
இவனுக்கு பாரமானதல்ல

இவன்
பூமியின் ஆர்வலன்
மானுட காவலன்

பூக்களின்  குழந்தை
சூரியனை ஈனுபவன்
இவனை விட்டுவிடுங்கள்

மனிதர்களின்
இறுக்கத்தில் இருந்தாலும்
ஏகாந்த நாயகன்

சராசரிகளோடு
சரிவரமாட்டான்

நிலவின் ஒளி
நீரின்வெளி
மேகத்தின் துளி
எழுதுகோல் உளி
இதுபோதும்  இவனுக்கு
இவனை விட்டுவிடுங்கள்

இவன்
சாவுத்தின்னும்  சாதியல்ல
சாவைத்தின்னும்  சாதி
இவனை விட்டுவிடுங்கள்
















காதல்........!..

நிலா  வெளிச்சம்
நெடுந்தூரப் பயணம்
நீயும் நானும்
விரல்பிடித்த மலர்களாய்
கவிதை பேசிக்கொண்டே

நீ சிரிக்கிறாய்
நிலா எட்டிப்பார்க்கிறது
நீ வெட்கப்படுகிறாய்
மேகம் திரைப்போடுகிறது

அரவம் கழுவிய
அழகுப்பொழுதிலும்
தனிமையின்  தாகப்பொழுதிலும்
நீ நீயாகவும்  நான் நானாகவும்
காதல்  கற்புடையது
என்று உணர்வார்கள்
நம் காதலால்







Thursday, 21 June 2012

மனசு......!

ஆழ்மனதில்
உன் நினைவின் கிள்ளல்

நீ பேசிய
ஒவ்வொரு வார்த்தையும்
என் எதிர்காலம் காட்டும்
கண்ணாடியாய்...........

என் இருள்வெளியெங்கும்
வெளிச்சங்களை
விசிறியடித்தவள் நீ

என் கனாசாலையில்
பூக்கள் குலுங்க
சிரிப்பவள் நீ

என் நினைவோடு
எப்போதும்
இருப்பதால்  நீயும் கவிதையே

தூரமாய்தான் இருக்கிறாய்
உனக்கும் எனக்கும்
இடைவெளி அதிகம்
அருகருகே மனசு...........!
























வேர்கள்.....!

ஓங்கி  வளர்ந்த.........!
நிழல் தூவும்   அடர்ந்த மேகங்களாய்
அழகு மரம்

எத்தனையோ கிளைகள்
எத்தனையோ இலைகள்
சோலை நிழலும்  சொக்கிப்போகும்
சுதந்திர நிழல்
சுந்தரமாய்  தரும்   சுதந்திர மரம்

எத்தனையோ
உயிர்கள்......எத்தனையோ  வலிகள்
எத்தனையோ  கனவுகள்
வேர்களாய்........

ஆமாம் ஆமாம்
வேர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை
நிழல்கள்
விழுங்கப்படுகிறதென்று......!

பனித்துளி.......!

எந்த கோதை
கோலமிட..........
ரா முழுதும் கண்விழித்து
இத்தனை புள்ளிகள்
இட்டிருக்கிறாள்  வானமகள்

இருக்கட்டும்...... இருக்கட்டும்.......!

என்னையே
உருக்கி  கவிதைகள்
எழுதிவைக்கிறேன்.......!
பத்துப்பைசாவுக்குத்  துப்பற்றவன்
என்று துப்புகிறார்கள்
இருக்கட்டும் இருக்கட்டும்
என்னை விட
என் கவிதைகளைக் காப்பாற்றிக்கொள்வேன்
அவர்களிடமிருந்து.......!

நானே..........!

நானே நிலம்
நானே விதை
நானே மழை
நானே உழவன்
என் பெயர் கவிதை........!

நொடிகள் போதுமடி!

நீண்டக் கருவெளியாய்..........
நீளுதென் நினைவு

நீ கடக்கும்
துளிப்பொழுதில்.....
துளிர்விடும் என்னெஞ்சம்

பார்க்கும் விழிகளோடு
நிமிடங்களும்
என்னைத் தின்ன....

நொடிகள் போதுமடி
உன் தரிசனம்
என்னில் நீ நிறைய.